இன்று பங்குச் சந்தை எப்படி?

வியாழன், 31 ஜனவரி 2008 (10:12 IST)
எல்லோரின் கவனமும் அமெரிக்க ரிசர்வ் வங்கியின் முடிவில்.......

நேற்று பங்குச் சந்தை தொடங்கும் போதே சரிவுடன் ஆரம்பித்து, நாள் முழுவதும் முன்னேற்றம் இல்லாமல் சரிவிலேயே முடிந்தது. பெட்ரோலிய நிறுவனங்கள், மின் உற்பத்தி, வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்கு விலை அதிகளவு குறைந்தது. நாள் முழுவதும் பங்குகளை விற்பனை செய்யும் போக்கே தொடர்ந்தது. நேற்று மட்டும் ரூ.73,108.25 கோடி மதிப்புள்ள பங்குகளில் வர்த்தகம் நடந்தது.

எஸ்ஸார் ஆயில், சன்பார்மா, டாடா கெமிக்கல்ஸ், டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், சம்பல் பெர்டிலைசர்ஸ், என்.டி.பி.சி ஆகிய பங்குகள் அதிகளவு விற்பனையாயின.

அமெரிக்க ரிசர்வ் வங்கி என்ன அறிவிக்கும் என்பதில் தான் எல்லோரின் கவனமும். இதன் முடிவை தொடர்ந்து பங்கு விலைகள் அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். எல்லோருமே ஒருவித பத‌ற்றத்துடன் இருக்கின்றனர். ஏனெனில் இதன் முடிவுகள் இந்திய நேரப்படி நடு இரவில் தான் தெரியும். எனவே யாருமே துணிந்து எந்த முடிவும் எடுக்க தயாராக இல்லை.

பல நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை அறிவிக்கின்றன. இவைகளின் இலாபமும் அதிக அளவில் இருக்கின்றது. ஆனால் இதை எல்லாம் பங்குச் சந்தை கவனத்தில் கொள்ளவில்லை. ஒட்டு மொத்தமாக கூற வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் பங்குச் சந்தையை உற்று கவனித்துக் கொண்டுள்ளனர். நல்ல முடிவு எடுக்க சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி கால் விழுக்காடு வட்டியை குறைத்தால் அமெரிக்க பங்குச் ச‌ந்தையின் குறியீ்ட்டு எண் 3 முதல் 5 விழுக்காடு வரை குறையும். அது அமெரிக்க ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பு அல்ல. இதனால் அந்நாட்டு பங்குச் சந்தையினர் மகிழ்ச்சி அடையும் வகையில் அரை விழுக்காடு வட்டி குறைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய பங்குச் சந்தை

இந்திய பங்குச் சந்தையின் போக்கை சரியாக கணிக்க முடியாது. ஏற்கனவே குறியீட்டு எண்கள் வீழ்ச்சி அடைந்து விட்டன. பிறகு சிறிது முன்னேறியது. மீண்டும் பழைய நிலைக்கே திரும்புகிறது. இங்கு பங்கு விலைகள் அதிகரித்து குறியீட்டு எண்கள் அதிகரிக்குமா அல்லது குறையுமா என்று துல்லியமாக கூற முடியாத நிலையே உள்ளது.

பங்குச் சந்தையில் குறைந்த இலாபத்திற்கும் பங்குகளை விற்பனை செய்வார்கள். முன்பேர சந்தையில் பிப்ரவரி மாத ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கு புரோக்கர்கள் தயங்குவார்கள். ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முடியாதவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களை செய்ய தயங்குவார்கள்.
அடுத்து வரும் நாட்களில் பல்வேறு சம்பவங்கள் நடக்கலாம். அடுத்த சில நாட்களில் புதிய சாதனை நிகழலாம் அல்லது வீழ்ச்சி அடையலாம்.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5135 புள்ளிகளி்ல துவங்கி 5000/4900 அளவிற்கு குறையலாம். இதுவே தொடர்ந்து கூடிய விரைவில் 4660 என்ற அளவிற்கும் சரியலாம். இதற்கு நேர்மாறாக நிஃப்டி 5270/5370/5450 என்ற அளவிற்கு உயர்ந்தால், இது குறைந்த காலத்திற்கு 5600-5700 வரை உயரும் என எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்