தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி 13.6 மில்லியன் டன்கள் !

தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி 13.6 மில்லியன் டன்கள் . அதிக விளைச்சலில் இந்தியாவிலேயே முதலிடம் !!

1950 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மொத்த அரிசி உற்பத்தி 3.3 மில்லியன் டன்கள். இது 1999 ஆம் ஆண்டு, 50 ஆண்டுகளில் 13.6 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் அரிசி உற்பத்தி குறைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டை அடுத்து கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கண்ணையன் இத்தகவலை இன்று வெளியிட்டார்.

ஆனால் 1950 ஆம் ஆண்டு 2.6 மில்லியன் ஹெக்டேரில் தமிழ்நாட்டின் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இது 1999 ஆம் ஆண்டு கணக்குப்படி 2.1 மில்லியன் ஹெக்டேராக குறைந்து விட்டது. அதாவது கடந்த 50 ஆண்டுகளில் 5 லட்சம் ஹெக்டேர் நன்செய் நிலபரப்பு குறைந்து விட்டது.

அரிசி விளைச்சலில் சாதனை !

அரிசி விளைச்சலில் 1998 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தமிழ்நாடு சாதனை புரிந்து வருகிறது.

1950 ஆம் ஆண்டு ஹெக்டேர் ஒன்றுக்கு 2 டன் மட்டுமே விளைச்சல் செய்த தமிழ்நாடு, 1999 ல் 5.8 டன் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இது இந்தியாவிலேயே அதிகமான விளைச்சல் ஆகும்.

வேளாண் துறையில் மாநில அரசின் முதலீட்டிலும், இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது என்றும் கண்ணையன் கூறியுள்ளார்.

கோவை வேளாண் பல்கலை சாதனை !

வேளாண் தொடர்புடைய தொழிலும், விஞ்ஞானத்திலும் கோவை வேளாண் பல்கலைக்கழகம் அரிய சாதனைகள் பலவற்றை நிகழ்த்தியுள்ளது. இந்தியாவிலுள்ள 29 வேளாண் பல்கலைகழகங்களில், கோவை வேளாண் பல்கலைக்குத்தான் சிறந்த வேளாண் கல்வி நிறுவன’ விருது, கிடைத்துள்ளது என்றும் கண்ணையன் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்