பஞ்சாப்பில் நெல் பயிரிட‌த் தடை!

சனி, 22 மார்ச் 2008 (18:05 IST)
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதால் நெல் நாத்து விட, நெல் விதைக்க தடை செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் எல்லைப்புற மாவட்டமான அமிர்தசரஸ் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து குறைவதாக கூறி நெல் நாத்து விடவும், நெல் விதைக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

அமிர்தசரஸ் மாவட்ட மாஜிஸ்ட்ரேட் ககான் சிங் பன்னு, 144 சட்ட பிரிவு படி தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நேற்று தடை விதித்துள்ளார்.

இதன்படி மே 10ஆம் தேதிக்கு முன்பாக, நெல் நாத்து விடக்கூடாது. அதே போல் ஜூன் 10ஆம் தேதி முன்பாக வயலில் நாத்து நடக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை உத்தரவில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வரும் ஆபத்தை கருத்தில் கொண்டு, தன் முனைப்பாக தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது என கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் மாஜிஸ்ட்ரேட் ககான் சிங் பன்னு, அமிர்சரஸ் மாவட்டத்தில் கரிப் பருவத்தில் நெல் முக்கியமான பயிராகும். இந்த மாநிலத்தில் உள்ள 2.22 லட்சம் ஹெக்டேரில் நெல் மட்டும் 1 லட்சத்து 78 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஆரம்பம் முதலே தண்ணீர் அதிக அளவு வேண்டும். இதற்கான தண்ணீர் பாசனத்திற்கு ஆழ்துளை குழாய்களில் இருந்து நீர் இறைக்கப்படுகிறது.

இதனால் கடந்த ஐந்து வருடங்களாக, இந்த மாவட்டத்தில் வருடத்திற்கு சராசரியாக 48 செ.மீ நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மே, ஜூன் மாதங்களில் நெல் பயிரிடப்படுவதே என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம், பஞ்சாப் விவசாயிகள் ஆணையம், பஞ்சாப் மாநில முன்னணி விவசாய விஞ்ஞானிகள் ஆகியோர் மே மாதத்தில் நெல் பயிரிடுட கூடாது என பல முறை வலியுறுத்தி கூறியுள்ளனர். ஆனால் நெல் பயிரிடுவதை தடுக்க முடியவில்லை. பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகம் ஜூன் 15ஆம் தேதிக்கு முன்பாக நெல் விதைப்பு நடைபெறாமல் இருந்தால், நிலத்தடி நீர் மட்டம் குறைவதை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவித்து இருந்தது.

இவற்றை கருத்தில் கொண்டு இதற்கு முன் இல்லாத வகையில், இப்போது முதன் முதலாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு ஜூன் 15 ந் தேதிக்கு முன்பு நெல் பயிரிடுவதை தடை செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்று, பல விவசாய துறை நிபுணர்கள் மாநில அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

பஞ்சாப், ஹரியான மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் குறுகிய கால பயிரான சாதி ரக நெல்லை பயிர் செய்கின்றனர். இது 75 நாட்களுக்குள்ளேயே அறுவடைக்கு தயாராகிவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்