நெல் ஆதார விலை ரூ.50 உயர்வு!

Webdunia

திங்கள், 3 டிசம்பர் 2007 (19:21 IST)
தமிழக அரசு நெல் ஆதார விலையை குவின்டாலுக்கு ரூ.50 உயர்த்தியுள்ளது!

தமிழக்தில் உள்ள விவசாயிகள் கோதுமைக்கு வழங்குவது போல் நெல்லுக்கும் டன்னுக்கு ரூ.1,000 ஆக உயர்த்த வேண்டும் என்று ரயில், சாலை மறியல், நெல் கொட்டு்ம் போராட்டம் உட்பட பல்வேறு வகை போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதற்கு எல்லா கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

தேசிய அளவில் கோதுமைக்கு வழங்கப்படும் அளவிற்கு நெல்லுக்கும் ஆதார விலையை வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா உட்பட எல்லா கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில் இன்று தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லுக்கு ஆதார விலையாக கூடுதலாக குவின்டாலுக்கு ரூ.50 அறிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் கொள்முதல் விலை சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.675-ம், மற்ற ரக நெல்லுக்கு ரூ.645 என அறிவித்தது. இந்த விலை போதாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு பிறகு ஊக்கத் தொகையாக குவின்டாலுக்கு ரூ.50 அறிவிக்கப்பட்டது.
இதன்படி சன்னரகத்திற்கு குவின்டாலுக்கு ரூ.725-ம், மற்ற ரகத்திற்கு ரூ.695-ம் கிடைக்கும்.

ஆனால் விவசாயிகள் கோதுமைக்கு சமமாக நெல்லுக்கும் குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மேலும் ஊக்கத் தொகை குவின்டாலுக்கு ரூ.50 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த ஊக்கத் தொகையையும் சேர்த்தால் சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.775-ம், மற்ற ரகங்களுக்கு ரூ.745-ம் கிடைக்கும்.

சென்ற கரீப் பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு ஆதார விலையாக சன்னரக நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.610-ம், மற்ற ரகத்திற்கு ரூ.580 என அறிவித்தது,. பிறகு இவை சன்னரகத்திற்கு ரூ.650, மற்ற ரகத்திற்கு ரூ.620 என அதிகரிக்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்