ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வு: மனிதநேய அறக்கட்டளை மாணவர்கள் 68 பேர் தேர்ச்சி! பார்வையற்ற மாணவியும் வெற்றி

வியாழன், 3 மார்ச் 2011 (21:16 IST)
FILE
இந்திய அரசுப் பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றிற்கு மத்திய அரசுப் பொதுப் பணி ஆணையம் நடத்திய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதன்மைத் தேர்வில் (IAS, IPS Main Exam), சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளையில் பயிற்சி பெற்றுத் தேர்வஎழுதிய 135 மாணவ-மாணவியரில் 68 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்விற்குத் தகுதி பெற்றவர்களில் இரண்டு கண் பார்வையையும் இழந்த ஜெ.சுஜிதா என்ற மாணவியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை நடத்திவரும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். இலவச கல்வியகத்தின் மூலமாக, கடந்த 4 ஆண்டுகளில் பயிற்சி பெற்ற 87 மாணவ, மாணவியர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, மத்திய அரசுப் பணியிலும், பணி பயிற்சியிலும் உள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வில் மனிதநேய அறக்கட்டளையில் பயிற்றுவிக்கப்பட்ட 135 மாணவ, மாணவியர் தேர்வு எழுதியிருந்தனர். இத்தேர்வு முடிவு இன்று வெளியாகியுள்ளது. இதில் மனித நேய அறக்கட்டளையின் 68 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக மனிதநேய அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு, முதன்முறையாக முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதிய உடனேயே நேர்முகத் தேர்விற்கான பயிற்சி நவம்பர் மாதத்திலேயே தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், இதில் ஐ.ஏ.எஸ். மாதிரி நேர்முகத் தேர்வுகள், ஆளுமைக்கான வகுப்புகள், டெல்லிக்கு அழைத்துச் சென்று அங்கு நடத்தப்படும் என்றும், அதற்கான பயணம், தங்குமிட வசதி, உணவு, பயிற்சி அனைத்தும் அறக்கட்டளையின் சார்பாக இலவசமாக நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் வெளி மாணவ-மாணவியரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், மாணவ, மாணவியர் தக்க சான்றிதழ்களுடன் மையத்தில் தங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்களை நாளை (04.03.2011) முதல் பதிவு செய்துக் கொள்ளலாம் என்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்கள் அறிய 044-2435 8373 அல்லது செல்பேசி எண் 98401 06162 தொடர்பு கொள்ளலாம் என்றும் மனிதநேய அறக்கட்டளை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்