அரபிக்கடலில் உருவானது புயல் சின்னம் ..வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்பு..!

Mahendran

வியாழன், 10 அக்டோபர் 2024 (12:16 IST)
அரபிக் கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி, அதாவது புயல் சின்னம் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது புயல் சின்னம் உருவாகிவிட்டதை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.
கேரள கடலோர பகுதி மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளுக்கு இடையில் அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது என்றும், இது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 13ஆம் தேதிக்கு மேல் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஓமன் பகுதியை நோக்கி சென்றடையும் என்றும், இதனால் குமரி கடல் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில், இலங்கை மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல், அதாவது அக்டோபர் 10 முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை, தமிழகத்தின் பல பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அக்டோபர் 12ஆம் தேதி மற்றும் 13ஆம் தேதி, தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையை பொருத்தவரை, அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்