சீரியஸ் கதையும் சிரிப்பு இயக்குனரும்!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (16:41 IST)
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 'மாதங்கள் ஏழு' என்ற படத்தை இயக்கியவர் யூகிசேது.

அப்படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் படம் இயக்குவதை விட்டுவிட்டு டி.வி.க்கு வந்து பல்வேறு சேனல்களில் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தவர், தற்போது ஒரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதவிருக்கிறார்.

இப்படத்தை இயக்க இருப்பவர் அஜித்தை வைத்து 'கிரீடம்' படத்தையும், தற்போது ஓடிக்கொண்டிருக்கும் 'பொய் சொல்லப் போறோம்' என்ற படத்தையும் இயக்கிய விஜய்தான். இயக்குவதோடு இப்படத்தை பிரபல எடிட்டர் ஆண்டனியோடு இணைந்து தயாரிக்கவும் செய்கிறார்.

யூகிசேது இலக்கிய சிந்தனை உள்ளவர். டாகுமெண்ட்ரி படங்களைப் போன்ற கதைகளை எழுதக் கூடியவர். விஜய் கமர்ஷியல் மசாலாக்களை படமாக்குபவர். இருவரின் கூட்டணியில் ஒரு படம் எப்படி இருக்கும்? நல்ல படமாகவும், ஜனரஞ்சகமான படமாகவும் இருக்கும் என்று நம்புவோம்.

வெப்துனியாவைப் படிக்கவும்