முழுநேர நடிகராகும் சமுத்திரக்கனி!

சனி, 26 ஏப்ரல் 2008 (20:15 IST)
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தயாரிப்பில் 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தை இயக்கியவர் சமுத்திரக்கனி. இயக்குனர் பாலசந்தரின் சீடர் இவர். அடுத்ததாக விஜயகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கினார். அந்தப் படமும் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

மீண்டும் படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் முதலில் டி.வி. தொடர்களை இயக்கி வந்த இவர், மீண்டும் டி.வி. சீரியல்களை இயக்க ஆரம்பித்தார். அதன்படி ராதிகாவின் ராடான் நிறுவனத்துக்காக 'அரசி' தொடரை இயக்கி வந்த இவருக்கு ராடான் மூலம் சரத்குமாரை வைத்து படம் இயக்கச் சொன்னார் ராதிகா.

சரத்குமார் படம் ஆரம்பிக்க இருந்த நிலையில், 'சுப்ரமணியபுரம்' படத்தின் இயக்குனர் சசிகுமார் தன் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்கக் கேட்டுக் கொண்டதற்கிணங்க நடிக்க ஒப்புக்கொண்டார். அத்தோடு பிரபல சீரியல்களை எடுத்த அபிநயா கிரியேஷன்ஸ் 'நாடகம்' என்ற தலைப்பிலான கதையை அந்த தயாரிப்பாளர் சொல்லி சமுத்திரக்கனியை இயக்க கேட்டுக் கொண்டார்.

இப்படி பல்வேறு வேலைகள் இருந்தும், சுப்ரமணிய சிவா இயக்கும் படம் 'யோகி'. அமீர்தான் ஹீரோ. அந்தப் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, இனி இயக்கத்தை விட்டுவிட்டு முழு நேர நடிகனாகிவிடும் திட்டத்தில் இருக்கிறார்.

'சும்மா இருக்கும் வரை எதுவும் கிடைக்காது. ஒரு வேலை தொடங்கிய பின்தான் ஒன்பது வேலைகள் வரும்' என்று புலம்பி வருகிறார் சுமுத்திரக்கனி.

வெப்துனியாவைப் படிக்கவும்