கடவுள் படத்தால் காயம்பட்டவர்கள்!

வியாழன், 20 மார்ச் 2008 (18:37 IST)
பாலா சண்டைக் காட்சி எடுக்கிறார் என்றால், கார் டிரைவர் சாவியுடன் தயாராகிவிடுவார், வேறொன்றுமில்லை. அடிபட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்க்கத்தான்!

நான் கடவுளில் சண்டை அமைத்தவர் ஸ்டண்ட் சிவா. பிதாமகனிலும் சண்டைக் காட்சி அமைத்தவர் இவரே. நான் கடவுளுக்காக காசியில் ஒரு சண்டைக் காட்சி. பத்து நாள் சிவாவின் உதவியாளர்களிடம் குத்து வாங்கியிருக்கிறார் ஆர்யா. ஒவ்வொரு நாளும் நான்கு பேருக்காவது பல் உடையும், உதடு கிழியும்.

தேனியிலும் உதை தொடர்கிறது. கட்டுமஸ்தான சண்டை நடிகர்களுடன் நிஜமாகவே கட்டிப் புரள வேண்டும், எட்டி உதைக்க வேண்டும், எகிறி குத்த வேண்டும். இந்த ரணகள சண்டையில் ஆர்யாவுக்கு பலமுறை ரத்தக் காயம் ஏற்பட்டதாம். காயமே அது பொய்யடா என மீண்டும் குஸ்திக்கு தயாராகி விடுவாராம். சொல்லி வியக்கிறது கடவுள் யூனிட்.

ஒவ்வொரு சண்டையும் ஒரு ருத்ர தாண்டவம் என்கிறார் சிவா. எல்லோரும் வியர்வை சிந்தி நடிப்பார்கள். இவர்கள் ரத்தம் சிந்தி நடித்திருக்கிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்