திரைக்கடல் ஓடி திரவியம் தேடு! – இன்று உலக பெருங்கடல் தினம்!

புதன், 8 ஜூன் 2022 (10:35 IST)
பூமியில் மனிதன் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ முக்கியமானவற்றில் ஒன்றான கடல்களை போற்றும் விதமாக இன்று உலக பெருங்கடல் தினம் அனுசரிக்கப்படுகிறது.

மனிதர்களின் முக்கியமான வாழ்விடம் நிலமாக இருந்தாலும், மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான சூழலை உருவாக்குவதில் கடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகில் நான்கில் மூன்று பங்கு கடல்கள்தான். மீதம் ஒரு பங்குதான் மனிதர்கள் மற்றும் விலங்குகள் வாழும் நிலப்பரப்புகள்.

மனிதன் உயிர்வாழ காற்று எவ்வளவு அவசியமானதோ அவ்வளவுக்கு கடல்களும் முக்கியமானவையாக இருக்கின்றன. கடல்கள் இருப்பதால்தான் மேகங்கள் ஆவியாகி நிலப்பரப்புகளில் மழையாக பெய்து விவசாயம் உள்ளிட்ட பயிர் தொழில் செழிக்க செய்கிறது. பெருங்கடல்களால் வளிமண்டல சுழற்சிகளும், புயல்களும் அதிக மழையை தருகின்றன. ஒவ்வொரு பருவகால மாற்றமும் ஏற்பட கடல்கள் மறைமுக காரணியாக விளங்குகின்றன.

மனிதன் வாழும் நிலப்பரப்பில் உள்ள உயிர்களை காட்டிலும் கடலில் கணக்கிட முடியாதா ஏராளமான ஜீவராசிகள் வாழ்ந்து வருகின்றன. மனிதனால் உயரமான மலைகளின் உச்சியை கூட தொட்டு விட முடியும். ஆனால் கடலின் ஆழத்தை இதுவரை தொட முடிந்ததில்லை. மரியான கடல் அகழி போன்ற நீண்ட பள்ளத்தாக்குகள் எவரெஸ்டின் உயரத்தை விட ஆழமானவை. மனிதனால் கண்டறியமுடியாத பல ரகசியங்களை கடல் தன்னுள்ளே கொண்டுள்ளது.

ஆண்டுதோறும் பல்லாயிர கணக்கான கடல் உணவுகளை கடல் மனிதர்களுக்கு வழங்குகிறது. இதுதவிர மருத்துவத்திற்கு உதவும் பாசிகள் முதல் முத்து, பவளம் வரை வாரி வழங்குகிறது கடல். ஆனால் கடந்த சில தசாப்தங்களாக மனிதன் செய்யும் மாசுகள் கடலையும் பாதிக்க தொடங்கியுள்ளன. பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்கள் பல அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் முழுவதும் கடல்நீரை நன்னீராக்கி உபயோகிக்கும் நிலையை கூட மனிதர்கள் அடையலாம். ஆனால் அதற்கு கடல்கள் மனிதனால் குப்பை கூளமாகி விடும் ஆபத்து உள்ளது. இந்த உலக பெருங்கடல் தினத்தில் கடல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் பாதுகாப்புக்காக உறுதி ஏற்போம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்