மனித கழிவை உணவில் கலந்து கைதிகளுக்கு வலுக்கட்டாயமாக கொடுத்த கொடூரம்!

திங்கள், 26 ஜூன் 2017 (18:48 IST)
வெனிசுலா நாட்டில் சிறையில் உள்ள கைதிகளுக்கு உணவில் மனித கழிவுகளை கலந்து கொடுத்து வலுக்கட்டாயமாக வாயில் திணித்த கொடூரம் நடந்துள்ளது. இதனை மனித உரிமைகள் ஆணையம் கையிலெடுத்துள்ளது.


 
 
வெனிசுலாவில் ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோ பதவிவிலக வலியுறுத்தி கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் கலந்து கொண்டவர்களில் நாடு முழுவதிலும் இருந்தும் இதுவரை 3000 பேர் கைதாகியுள்ளனர்.
 
இந்நிலையில் உணவு பதப்படுத்தும் நிறுவனம் ஒன்றை சூறையாடியதாக கூறி 40 பேரை கைது செய்து சிறையில் அடைத்ததில் 19 பேரை விசாரணை ஏதுமின்றி கௌரிகோ சிறையில் அடைத்துள்ளனர். மீதமுள்ளோரை ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.
 
தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர்கள் வெளியிட்ட தகவல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் கடுமையாக தாக்கி சிலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
 
மேலும் உணவில் மனித கழிவுகளை கலந்து சாப்பிட வற்புறுத்தியுள்ளனர். சாப்பிட மறுத்தவர்களின் வாயில் வலுக்கட்டாயமாக அதனை திணித்துள்ளனர். சிலர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு பயந்து அதனை சாப்பிட்டுள்ளனர்.
 
சிறை அதிகாரிகளே உணவில் மனித கழிவுகளை கலந்து சாப்பிட வைத்த சம்பவம் குறித்து அதிருப்தியடைந்த மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்