மெக்சிகோவுடன் வியக்கத்தக்க வர்த்தக ஒப்பந்தத்தை அறிவித்த டிரம்ப்

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (20:17 IST)
முக்கிய வர்த்தக அம்சங்களில் அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் ஓர் உடன்பாட்டை எட்டியுள்ளன. வட அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் (நாஃப்டா) தொடர்பான பேச்சுவார்த்தை விரைந்து முடிக்க அழுத்தம் அதிகரித்திருப்பதால் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
 
தற்போது அமலில் உள்ள இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து விமர்சித்து வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், வர்த்தக ரீதியான இந்த வெளிப்படையான முன்னேற்றம் குறித்து திங்கள்கிழமையன்று அறிவித்தார்.
 
இறுதியாக இந்த ஒப்பந்தம் கனடாவின் சம்மதம் மற்றும் கையெழுத்துடன் முழுமை பெறும். 1 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருடாந்திர வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடா இந்த ஒப்பந்தத்தில் மூன்றாவது நாடாக உள்ளது.
 
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஒரு வருடத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோது, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார். 1994 ஒப்பந்தம் தொடர்பான மறுபேச்சுவார்த்தைக்கு பலமுறைகள் வலியுறுத்திய டிரம்ப், அமெரிக்காவில் உற்பத்தி ரீதியிலான பணிகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். குறிப்பாக வாகன உற்பத்தி துறையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
என்ன சொன்னார் டிரம்ப்?
வெள்ளை மாளிகையில் இன்று வெளியிடப்பட்ட தொலைக்காட்சி பேட்டியில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளும் வர்த்தக ரீதியிலான பொதுவான விதிகளை ஒப்புக்கொண்டு நம்பமுடியாத வகையில் அமைந்த இந்த ஒப்பந்தத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்தார்.
 
ஆனால், இந்த ஒப்பந்தம் குறித்த குறைந்த தகவல்களே உள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பான இறுதி பயன்கள் மற்றும் விளைவுகள் குறித்து தெளிவில்லாத நிலையே உள்ளது.
 
கடந்த சில வருடங்களாக, பேச்சாளர்கள் நாஃப்டா ஒப்பந்தத்தை மாற்றியமைத்து வருகின்றனர் ஆனால் கடந்த ஐந்து வாரங்களில் கனடா அந்த பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளவில்லை.
 
"கனடாவை இதில் சேர்ப்பதா அல்லது கனடாவுடன் தனி ஒப்பந்தம் போட வேண்டுமா என்பது குறித்து நாங்கள் முடிவு செய்வோம்" என டிரம்ப் தெரிவித்தார். மேலும் கார்களுக்கு வரி விதிக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார் மேலும் நாஃப்டா என்ற பெயர் தனக்கு தவறான சமிக்ஞையை தருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
 
கனடாவின் நிலை என்ன?
மெக்சிகோவுடனான பேச்சுவார்த்தையை அறிவித்த பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ டிரம்புடனான தனது பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார். "ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர் மேலும் பேச்சுவார்த்தையை வெற்றிகரமானதாக்கும் நோக்கத்துடன் அவர்களின் குழுக்கள் இந்த வாரம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவர்" என ட்ரூடோவின் அலுவலகம் தெரிவித்துள்ளது செவ்வாய்க்கிழமையன்று கனடா அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். என்ரிகே பேன்யான் நியேடோவுடன் ஜஸ்டின் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இப்போது ஏன்?
ஆண்ட்ரெஸ் மேனுவேல் லொபெஸ் ஒப்ரடோர் மெக்சிகோவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் மாதம் அவரின் பதிவியேற்புக்கு முன் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற பேச்சாளர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்பந்தம் நிறைவு பெற 90 நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க காங்கிரஸில் ஒப்பந்தத்தை சமர்பிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்