பாகிஸ்தானுக்கு எதிராக போர் தொடங்குவது குறித்து ஆட்சேபம் தெரிவித்த கட்சி தலைவர்களை பாஜக பிரமுகர் எச்.ராஜா தாக்கி பேசியுள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் நிலவி வரும் நிலையில், போருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் விசிக தலைவர் திருமாவளவன், போர் அவசியமற்றது என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் போருக்கு எதிராக பேசியவர்களை தாக்கி பேசியுள்ள பாஜக பிரமுகர் எச்.ராஜா “பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட தயாராகி வருகிறார். நம் நாட்டிற்கு எதிராக பேசுவதையே சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா, சீமான், திருமாவளவன் மற்றும் இந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, போர் நடத்தக்கூடாது என்கிறார்கள். மத்திய அரசுக்கு எதிராக பேச வேண்டுமென்றே இவர்கள் பேசுகிறார்கள்.
வெளிநாட்டில் இருக்கு துரோகிகளை விட உள்நாட்டு தேச விரோதிகளே அதிகம். யுத்தம் வர வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும். திருமாவளவனுக்கு நாட்டுப்பற்று கிடையாது, இவர்களை போன்றோர்களை கண்காணிப்பில் வைக்காமல் போனால் நாட்டிற்கு ஆபத்து” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K