ஷேக் ஹசினா இல்லத்தில் புகுந்த போராட்டக்காரர்கள்.! பொருட்களை அள்ளி சென்றதால் பரபரப்பு..!!

Senthil Velan

திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (21:28 IST)
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், டாக்காவில் உள்ள அவரது இல்லத்துக்கள் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்து பொருட்களை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
வங்காளதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டால் ஏற்கனவே கலவரம் வெடித்த நிலையில் உச்சநீதிமன்றம் அந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இதை தொடர்ந்து கலவரம் கட்டுக்குள் வந்த நிலையில், இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த  மாணவர்கள் அமைப்பினருக்கு ஷேக் ஹசினா அழைப்பு விடுத்திருந்தார். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர் அமைப்பினர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இரு தரப்பினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 
 
பிரதமர் பதவியை ஷேக் ஹசினா ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர். மேலும் தலைநகர் டாட்டாவில் உள்ள பிரதமர் இல்லத்தை முற்றுகையிட சென்றனர்.

இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டதால், ஷேக் ஹசினா நாட்டை விட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவசர அவசரமாக வெளியேறினார். தற்போது ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வங்கதேசம் வந்துள்ளது.
 
வீட்டை சூறையாடிய போராட்டக்காரர்கள்:
 
இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பிரதமரின் இல்லத்தில் உள்ள படுக்கையிலும், இருக்கைகளிலும் போராட்டக்காரர்கள் படுத்து ஓய்வெடுக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும், பிரதமரின் இல்லத்தில் இருந்த பொருள்களையும் சிலர் தூக்கிச் சென்றனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் உணவு அருந்தும் வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
பிரதமர் மோடி ஆலோசனை:
 
வங்கதேச ஆட்சியை பறிகொடுத்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ராகுல் காந்தி சந்திப்பு:
 
முன்னதாக லோக்சபா எதிர்கட்சி தலைவர ராகுல், ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது வங்கதேச நிலவரம், ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்