கடந்த சனிக்கிழமை உலகை அதிர்ச்சியடைய வைத்த நிலநடுக்கம் நேபாளம், இந்தியா மற்றும் திபெத் நாடுகளிலும் கோர தாண்டவம் ஆடியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 அளவாக பதிவாகிய அந்த கோர நிலநடுக்கம் 6,000 பேருக்கு மேல் பழிவாங்கியது.
பல ஆயிரம் பேரை படுகாயப்படுத்தி நாட்டின் பெரும்பான்மை மக்களை வீடுகள் உடமைகளை இழந்து தவிக்க விட்ட நிலநடுக்கம் இன்னமும் நாட்டு மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் பல்வேறு உதவிகள், மருந்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள் வழங்கி நேபாள மக்களை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டுக் கொண்டுவர முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், காத்மண்டு நகரில் நிலநடுக்கம் நிகழ்ந்தபோது சாலையோரக் கட்டடம் ஒன்று, மொத்தமாக சரிந்து விழுந்து உயிரிழப்பு உண்டாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கும் இந்த நிலநடுக்கக் காட்சிகள், சாலையோர கட்டடம் ஒன்றின் சிசிடிவி கேமரா மூலம் பதிவாகியுள்ளது.
பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் அந்த சாலையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்கள் வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. நடந்து செல்பவர்களும் விரைவாக சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது பதிவாகிய காட்சிகள் தடதடக்க தொடங்குகின்றன. காக்கைகள் படபடத்து பறக்க, மரங்கள், மின் கம்பங்கள் ஆட சாலையின் ஓரம் இருந்த பெரிய கட்டடம் மொத்தமாகச் சரிந்து விழுந்து அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.