உக்ரைனில் உயிரிழந்த மாணவர் உடல் தானம்! – பெற்றோர் அறிவிப்பு!

சனி, 19 மார்ச் 2022 (09:15 IST)
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரில் குண்டு தாக்கி உயிரிழந்த நவீனின் உடலை மருத்துவ படிப்புக்கு தானமளிப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களுக்கும் மேலாகிவிட்ட நிலையில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல நகரங்களில் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. மேலும் பல நகரங்களை கைப்பற்றியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய சமயம் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த நவீன் என்ற மாணவர் குண்டு வெடிப்பில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாணவர் நவீனின் உடலை இந்தியா கொண்டுவர தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் 21ம் தேதி நவீனின் உடல் விமானம் மூலமாக கர்நாடகா கொண்டு வரப்படுவதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

இறுதி சடங்குகளுக்காக கொண்டு வரப்படும் நவீனின் உடலை மருத்துவம் படிக்க கூடிய மாணவர்களுக்கு கற்றலுக்கு உதவும் வகையில் தானமாக அளிக்க உள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்