சிகரெட் புகைக்காதவர்களுக்கு கூடுதல் விடுமுறை: புகைச்சலில் தம் பார்ட்டிகள்!

செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:03 IST)
சிகரெட் புகைக்காத ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்க ஜப்பான் நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் புகைப்பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், புகைப்பிடித்தலை கட்டுபடுத்தவும் ஏகப்பட்ட நடைமுறைகளை பல அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி புகை பிடிக்க கூடியவர்கள் இருக்கதான் செய்கிறார்கள்.

இந்நிலையில் ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் புகைப்பிடிக்காத ஊழியர்களுக்கு 6 நாட்கள் கூடுதல் விடுமுறை வழங்க திட்டமிட்டுள்ளது. மிகப்பெரும் அடுக்குமாடி கட்டிடத்தின் 26வது மாடியில் உள்ள அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தினமும் ஒவ்வொரு முறை புகைபிடிக்கவும் கீழே இறங்கி சென்று வர 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை ஆகிறதாம்.

அவர்கள் இப்படி சென்று வரும் நேரத்தில் புகைப்பிடிக்காத ஊழியர்கள் எங்கும் செல்லாமல் தங்கள் வேலைகளை கவனித்து வருகிறார்களாம். இதை கருத்தில் கொண்ட அந்த நிறுவனம் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாத ஊழியர்களுக்கு வருடாந்திர விடுமுறையில் மேலும் 6 நாட்களை கூடுதலாக வழங்கியுள்ளார்கள். இந்த அறிவிப்பு புகைப்பிடிக்கும் பார்ட்டிகளுக்கு சற்றே புகைச்சலை கிளப்பியுள்ளதாம்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிலர் இதுபோல புகைப்பிடிக்காதவர்களுக்கு சில சலுகைகள் தருவதன் மூலம் மற்றவர்களும் தங்கள் புகைப்பழக்கத்தை விட்டுவிட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்