விட்டா ரொம்ப ஓவரா போறீங்களே..? ரபாவுக்கு ஸ்கெட்ச் போட்ட இஸ்ரேல்! கடுப்பான அமெரிக்கா!

Prasanth Karthick

புதன், 10 ஏப்ரல் 2024 (09:43 IST)
காசாவின் ரபா நகரை கைப்பற்றியே தீருவோம் என இஸ்ரேல் சூளுரைத்து வருவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு முதலாக போர் நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கு தளமான காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் ராணுவம் வான்வழி, தரை வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பாலஸ்தீன பொதுமக்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

இந்த போரில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவி வரும் அதேசமயம் ஐ.நா அமைப்புகளுடன் இணைந்து காசா மக்களுக்கு அவசர வாழ்வாதார உதவிகளையும் செய்து வருகிறது. தற்போது காசா போர் காரணமாக அகதிகளாக வெளியேறிய மக்கள் பலரும் ரபா நகரில் தஞ்சமடைந்துள்ளனர். அங்குள்ள மக்களுக்கு எகிப்து வழியாக உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் இஸ்ரேல் தற்போது ரபாவையும் தாக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கு பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் ரபா மீது போர் தொடங்கினால் எகிப்து வழியாக வழங்கப்படும் மக்களுக்கான உதவிகளும் நிறுத்தப்பட்டு விடும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு “ஹமாஸ் உடனான போரில் வெற்றி பெறுவதற்கு ரபாவை கட்டுப்பாட்டில் எடுப்பது அவசியம். அது விரைவில் நடக்கும்” என கூறியுள்ளார்.

இஸ்ரேலின் இந்த முடிவுக்கு அமெரிக்கா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன், ரபாவுக்கு இஸ்ரேல் ராணுவத்தை அனுப்புவது தவறு என்றும், அங்குள்ள மக்களை காக்க செயல்திட்டம் தேவை என்றும் கூறியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்