ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் அல்ல, சாத்தான்கள் - செசன்ய அதிபர்

செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (16:15 IST)
செசன்ய அதிபர் ரம்ஜான் கடிரோவ் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் அல்ல, சாத்தான்கள் என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் செசன்ய அதிபர் ரம்ஜான் கடிரோவ், ”நான் உலக மக்கள் அனைவரிடத்திலும் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் என்று சொல்லாதீர்கள். அவர்கள் சாத்தான்கள்.

 
அவர்களின் எண்ணம் எல்லாம் எந்த வகையிலாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. மேற்குலக நாடுகளின் கட்டளைக்கு கீழ்படிந்து இஸ்லாத்தின் பெயரை களங்கப்படுத்துவதே அவர்களுக்கு இடப்பட்ட பணி. தங்கள் பணியை இன்றுவரை கச்சிதமாக திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றனர்.
 
இவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் மறைமுகமாக மேற்குலக நாடுகளால் தாராளமாக தரப்படுகின்றன. ஆயுதங்கள், உடைகள். நவீன சாதனங்கள் எல்லாம் எங்கிருந்து இவர்களுக்கு வருகின்றன. யாரை திருப்திபடுத்த இவர்களின் வெறியாட்டம்?
 
கல்லூரிகள், பள்ளிகள், தேவாலயங்கள், மசூதிகள், அனைத்திலும் இந்த கொடியவர்களின் உண்மை முகத்தைப் பற்றிய தெளிவினை விளக்கி பாடம் எடுக்க வேண்டும். இளைஞர்களின் மத்தியில் இந்த சாத்தான்கள் கொடூர குணம் விளம்பரப் படுத்தப்பட வேண்டும்.
 
இஸ்லாம் இதனை இஸ்லாமியர்களுக்கு கற்று தரவில்லை என்ற உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். இது நம் அனைவரின் மீதும் சுமத்தப்பட்ட கடமையாக செயலில் இறங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்