போலீஸுக்கே அல்வாவா? கர்பிணி போல வந்த கடத்தல் பெண்மணி!

வியாழன், 3 டிசம்பர் 2020 (12:06 IST)
பிரேசிலில் போதைபொருள் கடத்தலை தடுக்க முயன்ற போலீஸாரை கர்ப்பிணி பெண் போல வந்து கடத்தல்கார பெண் ஏமாற்ற முயன்ற சம்பவம் வைரலாகியுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலில் போதைபொருள் கடத்தல் பெருமளவில் நடந்து வருவதால் அதை தடுக்க சிறப்பு போலீஸ் பிரிவு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பராகுவே – பிரேசில் எல்லையில் போதைபொருள் கடத்தல் நடப்பாதாக அறிந்த போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக பெண் ஒருவர் காரை ஓட்டி வந்துள்ளார். அவரை நிறுத்திய போலீசார் காரை சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண் தான் ஒரு கர்ப்பிணி என்றும், தன்னை போக அனுமதிக்குமாறும் கூறியுள்ளார். ஆனால் பெண்ணின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த போலீஸார் அவரை சோதனையிட்டபோது அதிர்ச்சி காத்திருந்தது.

அவர் கர்ப்பிணியே அல்ல.. வயிற்றுக்குள் காலி தர்பூசணி பழத்திற்கு கொக்கெய்ன் பொட்டலங்களை வைத்து கட்டி கர்ப்பிணி போல காட்டிக் கொண்டுள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது 100 டாலர்கள் தருவதாக கூறி சிலர் இதை எல்லை கடந்து கொடுத்து விடுமாறு கேட்டதாகவும், இவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறியுள்ளார். பெண்ணை கைது செய்துள்ள போலீஸார் கடத்தல்காரர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்