இருந்த சுவடே தெரியாமல் அழிந்த நகரம்; 20 ஆயிரம் பேர் கதி என்ன? – அதிர்ச்சி அளிக்கும் லிபியா பேரிடர்!

வியாழன், 14 செப்டம்பர் 2023 (14:03 IST)
லிபியாவில் ஏற்பட்ட கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் கடற்கரையோர நகரமே மொத்தமாக அழிந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆப்பிரிக்க கண்டத்தின் வடக்கு பகுதியில் மத்திய தரைக்கடல் அருகே அமைந்துள்ள நாடு லிபியா. கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போரால் சிதைவுற்று இருக்கும் லிபியாவின் கிழக்கு பகுதிகள் கிளர்ச்சியாளர்கள் கையிலும், மேற்கு பகுதிகள் வெளிநாடுகளின் ஆதரவு பெற்ற அரசின் கையிலும் உள்ளன.

உள்நாட்டு போரால் ஏற்கனவே பல பேர் இறந்து போயுள்ள நிலையில் லிபியாவை இயற்கையும் சோதித்து இருக்கிறது. மத்திய தரைக்கடல் பகுதியில் உருவான வலுவான டேனியல் புயல் லிபியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் தாக்கியுள்ளது. புயலுடன் கனமழையும், வெள்ளப்பெருக்கும் சேர்ந்து கொண்டு லிபியாவை புரட்டிப் போட்டுள்ளது.

கிட்டத்தட்ட இந்த புயல் மற்றும் வெள்ளத்தால் 10 ஆயிரம் பேர் வரை மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் சுமார் 20 ஆயிரம் பேர் வசித்து வந்த நிலையில் அங்கு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பெரிய பெரிய கட்டிடங்களே சின்னாபின்னமாகி உள்ளன. வெள்ளத்திற்கு முன்பும், பின்பும் டெர்னாவில் நிலை குறித்து வெளியாகியுள்ள சேட்டிலைட் புகைப்படங்கள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

சுமார் 7 ஆயிரம் பேர் வரை டெர்னாவில் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் மாயமானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். லிபியாவில் ஏற்பட்டுள்ள இந்த பேரிடர் இந்த ஆண்டின் அதிக மனித உயிர்களை பலி கொண்ட பேரிடர் சம்பவமாக மாறி வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்