காலை உணவு சாப்பிடாவிட்டால் மாரடைப்பு ஏற்படும்

புதன், 24 ஜூலை 2013 (15:16 IST)
FILE
காலை உணவு சாப்பிடாமல் தவிர்ப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாக ஒரு கருத்துக்கணிப்பு தகவல் தெரிவித்துள்ளது.

இன்றைய அவசரமான வாழ்க்கைமுறையில், பெரும்பாலானவர்கள் காலை உணவு சாப்பிடுவதில்லை. இவ்வாறு ஊட்டச்சத்துக்கு மிக முக்கியமான காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஒரு கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

45 முதல் 82 வயது வரை உள்ள 26,902 ஆண்களிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முடிவில், அதிகமாக மது அருந்துபவர்கள், புகை பழக்கமுடையவர்கள், அதிக நேரம் உழைப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், போதிய உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்துவருவதாக தெரியவந்துள்ளது.

மேலும், காலை உணவை சாப்பிடாதவர்களுக்கு மற்றவர்களை விட திடீர் மாரடைப்பு ஏற்பட 27 சதவீதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருத்துக் கணிப்பு மற்றும் மருத்துவ ஆய்வை ஒப்பிட்டு எச்சரித்துள்ளனர்.

அது போல இரவு நேர உணவை 10 மணிக்கு பிறகே சாப்பிடும் பழக்கம் இதய நோய்களை கொண்டு வந்து விடும் என கூறியுள்ள ஆய்வாளர்கள் காலை உணவை தவிர்த்தால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு ஆபத்து ஆகிய பிரச்சினைகளும் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேஷன் ஜர்னல் சர்குலேஷன் (American Heart Association journal Circulation ) இதழில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்