அரவிந்தசாமி படத்திற்கு தடை விதிக்க கோரி புகார் அளித்த நடிகர் விமல்

வெள்ளி, 22 டிசம்பர் 2017 (04:52 IST)
அரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் விமல் திடீரென நடிகர் சங்கத்தில் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

விமல் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் தயாரிப்பாளர் முருகனின் ஹேமந்த் மூவிஸ் தயாரிப்பில் 'ஜன்னல் ஓரம்' என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த பட வெளியீட்டு சமயத்தில் நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர் சிக்கியிருந்த காரணத்தால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டார். அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடமிருந்து 25 லட்சமும், லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமிருந்து 65 லட்சமும் கடனாக பெற்று முருகனிடம் கொடுத்தேன்.

நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து ஒரு ரூபாய் கூட எனக்கு திரும்பி வரவில்லை. ஆனால் நிதியுதவி செய்தவர்களுக்கு வட்டியோடு திருப்பித் தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நான் உள்ளாகி, தொழில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முருகன், அவருடைய மனைவி பெயரில் தயாரித்து திரைக்கு வரவிருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பட வெளியீட்டிற்கு முன் என்னுடைய பணத்தைப் பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு விமல் தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்