தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் பூரி ஜெகன்னாத். அவரின் பல ஹிட் படங்கள் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டாகியுள்ளன. ஆனால் சமீபகாலமாக அவரின் படங்கள் படுதோல்வி அடைந்து வருகின்றன. விஜய் தேவரகொண்டாவை வைத்து அவர் இயக்கிய லைகர் படம் படுமோசமான தோல்வி பெற்றதை அடுத்து அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதியை வைத்து ஒரு பேன் இந்தியா படத்தை இயக்கி, தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் தபு, சம்யுக்தா மேனன், துனியா விஜய் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். பூரி ஜெகன்னாத்துடன் நடிகை ஷார்மி இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் கரூரில் விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தில் நடந்த கூட்டநெரிசல் விபத்தால் 39 பேர் பலியானதை அடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார் விஜய் சேதுபதி. இதை இயக்குனரும் தயாரிப்பாளருமான பூரி ஜெகன்னாத் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.