அறம் படத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து இயக்குனர் கோபி நயினார் இப்போது ஆண்ட்ரியா நடிப்பில், இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் மனுசி என்ற படத்தை இயக்கியுள்ளார். இளையராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே அறையில் நடக்கும் கதைக்களமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த படம் சென்சாருக்கு சென்ற நிலையில் அங்குள்ள அதிகாரிகள் பல காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்து சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் “படத்தை சென்சார் செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்கவேண்டும்” என்றும் சுதந்திர வரம்புக்குட்படாதக் காட்சிகளை நீக்க சம்மதம்” என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அடுத்த கட்ட விசாரணையில் “படத்தில் உள்ள ஆட்சேபத்துக்குரியக் காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க சம்மதித்தால் சென்சார் சான்றிதழ் தருவது குறித்து ஆலோசிப்போம்” என சென்சார் போர்டு சார்பாக சொல்லப்பட்டுள்ளது. இதற்கு வெற்றிமாறன் தரப்பு “ஆட்சேபகரமானக் காட்சிகள் மற்றும் வசனங்கள் என்று அவர்கள் படத்தின் முக்கியமானக் காட்சிகளை நீக்க சொல்கிறார்கள்” என எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி ஆனந்த் என் வெங்கடேஷ் “தணிக்கை வாரியத்தைக் கருத்தை எதிர்த்து வழக்குத் தொடரலாம்” என வெற்றிமாறன் தரப்புக்கு அனுமதியளித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.