ரசிகர்கள் எதிர்பார்த்தது வேறு.. நாங்கள் கொடுத்தது வேறு.. ‘தக்லைஃப்’ படத்திற்காக வருத்தம் தெரிவித்த மணிரத்னம்..

Mahendran

செவ்வாய், 24 ஜூன் 2025 (12:20 IST)
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் மணிரத்னத்தின் படைப்பான 'தக்லைஃப்' திரைப்படம், வெளியீட்டுக்கு முன்னரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை அள்ளி வந்தபோதிலும், ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தையே தந்தது; வசூலிலும் சறுக்கியது. இந்த திடீர் தோல்விக்கான காரணத்தை மணிரத்னம் தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.
 
"எங்கள் கூட்டணியில் மீண்டும் ஒரு 'நாயகன்' படம் வரும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, நாங்கள் வருந்துகிறோம் என்பதை மட்டுமே சொல்ல முடியும். ஏனென்றால், 'நாயகன்' போன்ற ஒரு படத்தைத் திரும்பவும் எடுக்கும் எண்ணம் எங்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை.
 
மணிரத்னம் மேலும் கூறுகையில், "நாங்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக் களத்தில் பயணிக்க விரும்பினோம். ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளோ வேறு திசையில் இருந்தன. நாங்கள் கொடுத்த படத்துக்கும், அவர்கள் எதிர்பார்த்ததற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. இதன் காரணமாகவே 'தக்லைஃப்' எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை," என்று தோல்விக்கான காரணத்தை விளக்கினார்.
 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்ததால், ரசிகர்கள் 'நாயகன்' போன்ற ஒரு கிளாசிக் படத்தையே ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், படக்குழு முற்றிலும் புதிய பாணியில் களமிறங்கியதே, இந்த தோல்விக்குக் காரணம் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்