பேனர் கலாச்சாரம்: சூர்யா ரசிகர்களின் அதிரடி அறிவிப்புக்கு காவல்துறை அதிகாரி பாராட்டு

ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (08:45 IST)
பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம் பெண் பலியான பின்னரே பல அரசியல்வாதிகளுக்கும் திரையுலகில் இருக்கும் மாஸ் நடிகர்களுக்கும் ஞானோதயம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
சுபஸ்ரீ மரணத்திற்குப்பின் அரசியல்வாதிகள் தங்கள் தொண்டர்களுக்கும், நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கும் இனிமேல் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நடைபெற்ற ’காப்பான்’ திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, ’காப்பான் திரைப்பட வெளியீட்டின்போது யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக பள்ளிகளில் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தி இருந்தார்
 
 
அதேபோல் நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் என்பவர் சூர்யா ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருந்தார். ’காப்பான்’ திரைப்படத்தின் போது பேனர் வைக்கும் செலவில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் வாங்கி கொடுத்து சூர்யாவின் ரசிகர்கள் உதவி செய்யலாம் என்று கோரிக்கை விடுத்திருந்தார் 
 
 
நெல்லை துணை ஆணையரின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சூர்யாவின் ரசிகர்கள் ’காப்பான்’ திரைப்படம் வெளியாகும் செப்டம்பர் 20ஆம் தேதி பேனர் கட்ட செய்யப்படும் பணத்தில் 200 ஹெல்மெட்டுக்கள் வழங்கப்படும் என்று அறிவித்தனர். சூர்யா ரசிகர்களின் இந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்த நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜுன் சம்பத் அவர்கள் சூர்யா ரசிகர்கள் ஹெல்மெட் வழங்கினால் அவர்களே உண்மையான காப்பான் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்