கொட்டுக்காளி இயக்குனர் வினோத்ராஜ் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் சிவகார்த்திகேயன்!

vinoth

புதன், 28 ஆகஸ்ட் 2024 (08:19 IST)
கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

பின்னணி இசையில்லாமல் உருவான இந்த திரைப்படம் ரிலீஸூக்கு முன்னரே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அதற்கு முக்கியக் காரணம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பலர் இந்த படத்தைப் பார்த்து பாராட்டி இருந்ததுதான். மேலும் சூரி, விடுதலை மற்றும் கருடன் ஆகிய திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி இருந்ததும் ஒரு காரணம்.

ஆனால் ரிலீஸுக்குப் பின்னர் இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களை ஈர்க்கவில்லை. அதற்கு முக்கியக் காரணம் படத்தின் இறுதிக்காட்சி தெளிவின்மையாக பார்வையாளர்களே யூகித்துக் கொள்ளும் விதமாக வைக்கப்பட்டிருந்ததுதான். அதனால் படம் பார்த்த ரசிகர்கள் படம் முடிந்துவிட்டதா என்பதே புரியாமல் குழம்பிப் போயினர். இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் வினோத்ராஜ் “சிவகார்த்திகேயன் என் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டு கதை கேட்டிருக்கிறார். நடிகராக அவருடைய உயரம் எனக்குத் தெரியும். அதை ஈடுசெய்யும் கதை வந்தால் கண்டிப்பாக நான் அவரை இயக்குவேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்