பாலியல் குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் சினிமாவில் தடை.! தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடி தீர்மானம்.!!

Senthil Velan

புதன், 4 செப்டம்பர் 2024 (20:54 IST)
பாலியல் புகாரில் உண்மை இருந்தால் 5 ஆண்டு வரை திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் தென்னிந்திய நடிகர் சங்க ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ள நிலையில், தமிழ் நடிகைகளும் பாலியல் தொல்லை அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் சினிமாவிலும் கமிட்டி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த பபரப்பான சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ‘SIAA-GSICC ‘ கமிட்டி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
 
அதில், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பூ, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பாலியல் புகார்கள் தொடர்பாக 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
 
நடிகர் சங்க தீர்மானங்கள்:
 
1.பாலியல் புகார்களில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் புரிந்தவர்களை விசாரித்து புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
 
2.பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் தருவதில் இருந்து அவர்களுக்கு சட்டரீதியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும்.
 
3.பாலியல் குற்றங்களில் புகார் கூறப்படும் நபர்கள் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும். பின்னர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 
4.பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக தனி தொலைபேசி எண் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. தற்போது இ மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
 
5.பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டி மூலம் தங்கள் புகார்களை அளிக்கவும் அதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
6.யூடியூபில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் கமிட்டி அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
 
7.மேலும் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்