அலட்சியமும் பேராசையுமே காரணம்… சென்னை வெள்ளம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கோபம்!

வியாழன், 7 டிசம்பர் 2023 (07:31 IST)
மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து 2 நாட்களுக்கு மேலாகிவிட்டாலும், இன்னமும் அது சென்னையில் உருவாக்கி சென்ற பாதிப்புகள் நிவர்த்தி செய்யப்படவில்லை. பல இடங்களில் குடியிருப்புகள் வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “10 வருடங்களாக வெள்ளமும் 100 மணிநேரத்துக்கு மேலான மிந்தடையும், முழங்கால் அளவும் வெள்ளமும் அனைத்து வருடங்களிலும் கொடூரமான உண்மையாக அமைந்துள்ளது. இந்த வருடம் புதிய மைல்கல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வரலாற்றுப் பூர்வமாக எங்கள் பகுதி ஏரி சூழ்ந்த பகுதியோ அல்லது தாழ்வான பகுதியோ அல்ல. எங்கள் பகுதியான கொலப்பாக்கத்தில் நிறைய திறந்தவெளிப் பகுதிகளும் குளங்களும் உள்ளன. அலட்சியமும், தவறான நிர்வாகமும், பேராசையும்தான் கழிவுநீர் ஒரே ஒரு பாசனக் கால்வாயில் சென்று சேர்வதற்கு வழிவகுத்துள்ளது.

நான் என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறேன். நான் ஒரு படகு மற்றும் சில மோட்டார்களை எப்போதும் என்னுடன் வைத்திருக்கிறேன். சென்னை மக்களின் நேர்மறை எண்ணங்களுக்கு பாராட்டுகள். கண்டிப்பாக இப்போது இருப்பதை விட சிறப்பான தீர்வுகள் இருக்கும். மிக விரைவில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்