தமிழ்த் திரையுலகில் 90 களில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் திரையுலகின் டாப் நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்தவர். 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இவர் திகழ்ந்தார். கவர்ச்சி மற்றும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் இரண்டிலும் கலக்கியவர் ரம்பா.
ஒரு கட்டத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய அவர் படம் தயாரித்து நஷ்டம் அடைந்தார். அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகிய ரம்பா கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதையடுத்து அவ்வப்போது சமூகவலைதளங்களில் ரம்பாவின் குடும்ப புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகும். இந்நிலையில் சமீபத்தில் ரம்பா மீண்டும் சினிமாவுக்கு வர ஆர்வமாக இருப்பதாகக் கூறியுள்ளார். இதுபற்றி பேசியுள்ள அவர் “எப்போதுமே என்னுடைய முதல் காதலாக சினிமாதான் இருந்து வருகிறது. இது மீண்டும் சினிமாவுக்கு வருவதற்கான சரியான நேரம். எந்தவித சவாலான பாத்திரங்களையும் ஏற்று நடிக்க ஆவலாக உள்ளேன். மீண்டும் ரசிகர்களைக் கவர நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.