வைரமுத்து தயாரிப்பில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினி… !

vinoth

வியாழன், 26 செப்டம்பர் 2024 (14:50 IST)
தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார்.  இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி தன்னுடைய மலரும் நினைவுகளை முகநூல் வாயிலாக பகிர்ந்து வருகிறார்.

அப்படி இன்று அவர் பகிர்ந்துள்ள பதில் “ கொடிபறக்குது’ படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ‘சேலைகட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு’ பாடலை எழுதி எடுத்துக்கொண்டு  பாரதிராஜாவைப்  பார்க்கப் போயிருந்தேன். ரஜினியை ஒப்பனையில் பார்த்ததும் உள்ளம் மகிழ்ந்தேன். படப்பிடிப்புத் தளங்களில் பார்க்கமுடியாத  என்னைப் பார்த்ததும் ரஜினி தன் உடல்மொழியில் ஆச்சரியம் காட்டினார்.

காட்சிகளின் இடைவெளியில் அவரும் நானும் தனியானோம். என் தோளில் கைபோட்டுக்கொண்டே ஓர் ஓரமாய்ப்  பொடிநடை போனார். உறுதியான சொற்களில் என்னைப் பார்த்துச் சொன்னார்: “இளையராஜாவுக்கு ஒரு படம் பண்ணிவிட்டேன்; பாரதிராஜாவுக்கு இந்தப்படம் நடித்துக் கொண்டிருக்கிறேன்; அடுத்து நீங்கள்தான்.

எப்போது என்னை வைத்துப் படம் செய்யப் போகிறீர்கள்; நான் தயார்” என்றார். ஒன்றும் பேசாமல் நின்றேன். சில கணங்கள் சென்றபிறகு மீண்டும் தன்னிலை அடைந்தேன். “மிக்க நன்றி இப்படிக் கேட்பதற்கே பேருள்ளம் வேண்டும். படம் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தால் நான் உங்களைத்தான் அணுகுவேன்”

அவர் கைகளைப் பற்றிக்கொண்டு தழுதழுத்தேன் இன்றுவரை அந்த வாக்குறுதி அப்படியே இருக்கிறது. அவரும் அதை மறந்திருக்க மாட்டார். ஆண்டு பலவாக அந்த வார்த்தைகளை நான் அசைபோட்டே வந்திருக்கிறேன். நண்பர்களாய் இருப்பது புனிதமானது; வியாபாரிகளாய் இருப்பது கணிதமானது. கணிதம் புனிதத்தைக் கெடுத்துவிடும்; கெடவிடமாட்டேன் அதனால், இப்போது மட்டுமல்ல எப்போதும் கேட்கமாட்டேன்.” எனக் கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்