ரஜினி ஒரு பச்சோந்தி தமிழன்: இயக்குநர் களஞ்சியம் விளாசல்!

திங்கள், 22 மே 2017 (11:18 IST)
சமீபத்தில் தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியல் குறித்து அதிகமாகவே பேசினார். அப்போது தான் ஒரு பச்சை தமிழன் என கூறினார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய இயக்குனர் களஞ்சியம் ரஜினி ஒரு பச்சோந்தி தமிழன் என கூறினார்.


 
 
இயக்குனர் களஞ்சியம் தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல்கொடுத்து வருபவர். அவர் ரஜினியின் அரசியல் கருத்துக்கள் குறித்து இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
 
அதில், ரஜினி தனது படங்கள் வெளிவரும் நேரத்தில் தான் அரசியலுக்கு வருவது மாதிரியான கருத்துகளை கூறுவார். இந்த மோசமான வியாபார யுக்தி மூலமாகத்தான் கடந்த 20 வருடங்களாக ரஜினி தனது படங்களை ஓட வைத்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்து ரஞ்சித் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படங்களின் வியாபாரத்துக்காகத்தான் ரஜினி இவ்வாறு பேசியிருக்கிறார்.
 
ரஜினி படங்கள் வெளிவரும் நேரங்களை தவிர, மற்ற நேரங்களில் தமிழகத்தில் நடக்கும் எந்த விஷயங்கள் குறித்தும் வாய் திறக்காமல் இருக்கிறார். தற்போது பேசும்போது நான் 40 வருடங்களுக்கு மேல் இங்கே இருக்கிறேன். நான் ஒரு பச்சை தமிழன் என்று கூறுகிறார். அவர் பச்சை தமிழன் அல்ல, பச்சோந்தி தமிழன். காரணம் அவர் காவிரி பிரச்னையில் தமிழகத்தில் ஒரு கருத்தும் கர்நாடகத்துக்குச் சென்றால் வேறு ஒரு கருத்தும் தெரிவிப்பார்.

வெப்துனியாவைப் படிக்கவும்