சினிமாவை மதிப்போம்… ஸ்பாய்லர்களை வெளியிடாதீர்கள்- கல்கி பட நிறுவனம் வேண்டுகோள்!

vinoth

வியாழன், 27 ஜூன் 2024 (08:12 IST)
பாகுபலி 2 க்குப் பின் பிரபாஸ் நடித்த எந்த திரைப்படமும் அவருக்குக் கைகொடுக்கவில்லை. வரிசையாக ப்ளாப் ஆகின. இந்நிலையில் இப்போது அவர் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 AD என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.. இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் வேடத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக அவருக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் இன்று உலகமெங்கும் ரிலீஸாகிறது. படத்தின் டிரைலர்கள் அதன் மீதான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளன.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகும் நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதில் “இது நான்கு ஆண்டுகளாக தொடரும் கடினமான பயணம். இந்த படத்துக்காக இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் அவர் குழுவினர் கடின உழைப்பைக் கொடுத்துள்ளனர்.

இதை உலகளவில் கொண்டு செல்ல என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளோம். தரத்தில் எந்த சமாதானமும் நாங்கள் செய்துகொள்ளவில்லை. ரத்தமும் வியர்வையும் அதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. சினிமாவை மதிப்போம். திறமையை மதிப்போம். படத்தின் ஸ்பாய்லர்களை வெளியிடவோ, நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் கொடுப்பதோ மற்றும் பைரசியில் ஈடுபடுவதோ வேண்டாம் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். படத்தின் கருப்பொருளை பாதுகாத்து வெற்றியை அனைவரும் சேர்ந்து கொண்டாடுவோம்” எனக் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்