'தர்பார்' படத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை!

வியாழன், 20 ஜூன் 2019 (18:49 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "தர்பார்"  படத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல் கிடைத்துள்ளது. 


 
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான "தர்பார் " படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166வது படமாக உருவாகவிருக்கிறது. அண்மையில்  இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. 
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.  ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.
 
இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  சமீபத்தில் நடந்து முடிந்தது. எனவே விரைவில் 3ம் கட்ட படப்பிடிப்பு பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பாக்கப்பட்ட நேரத்தில் தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை ரஜினியின் தர்பார் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் இதில் ரஜினியின் அறிமுக காட்சியில்  நடிப்பதாகவும், ரஜினியுடன் பயங்கரமான சண்டைக்காட்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


 
மேலும் யுவராஜின் தந்தை யோக் ராஜ் சிங்கும் ஒரு கிரிக்கெட் வீரர். இவர் ஒரு டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நடிப்பில் இறங்கி பஞ்சாபி படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். 
 
யுவராஜ் சிங்  சமீபத்தில் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்