நாளை அமைச்சராக பொறுப்பேற்கிறார் பொன்முடி

sinoj

புதன், 13 மார்ச் 2024 (19:19 IST)
நாளை காலை பொன்முடி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்கிறார் என தகவல் வெளியாகிறது.
 
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கிடையே பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.
 
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர்.
 
பொன்முடி எம்.எல்.ஏவாக இருந்த திருக்கோவிலூர் தொகுதி சமீபத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டது; இந்த நிலையில் உச்சநீதிமன்றம் பொன்முடி மீதான தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதால், இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுமா? அல்லது பொன்முடிக்கு எம்.எல்.ஏ பதவி மீண்டும் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
 
இந்த நிலையில், பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கடிதம் எழுதியுள்ளார்.
 
நாளைக்குள் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கக் கோரி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகலை இணைத்து  தனது  பரிந்துரையுடன் ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்