சஜீவ் பழூர் இயக்கத்தில்,நிமிஷா சஜயன் நடிப்பில், ஜிதேஷ் வி வழங்கும், கலமாயா பிலிம்ஸின் ‘என்ன விலை’

J.Durai

செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (11:11 IST)
பன்முகத்திறன் கொண்ட பல கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்துவதில் நிமிஷா சஜயன் ஆர்வம் கொண்டவர். 'சித்தா', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', 'போச்சர்' என தான் ஏற்று நடித்த அனைத்துக் கதாபாத்திரங்களின் ஆன்மாவையும் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.  
 
அவர் இப்போது ‘என்ன விலை’ என்ற புதிய தமிழ் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இத்திரைப்படம் த்ரில்லர் அம்சங்களுடன் கூடிய ஒரு ஃபேமிலி டிராமா ஆகும். திலீஷ் போத்தன் இயக்கத்தில், பகத் பாசில் நடிப்பில் விமர்சன மற்றும் வணிகரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' திரைப்படத்தின் அசாதாரண திரைக்கதைக்கு புகழ் பெற்ற சஜீவ் பழூர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் சிறந்த திரைக்கதைக்காக, சிறந்த திரைக்கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் இவர் பெற்றார்.
 
இந்தப் படத்தில், நடிகர் கருணாஸ் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இதுவரை செய்யாத வித்தியாசமான மற்றும் தனித்துவமான கதாபாத்திரமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் உறுதிப்படுத்துகின்றனர்.
 
இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது ஷெட்யூல் எளிமையான பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த ஷெட்யூல் கோகுலம் ஸ்டுடியோவில் 8 நாட்கள் படமாக்கப்படும். அதைத் தொடர்ந்து, 12 நாட்கள் சென்னை மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு, இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பும் முடிவடையும்.
 
இது குறித்து தயாரிப்பாளர் ஜிதேஷ் வி
 கூறும் போது......
 
நடிப்பின் மீது நிமிஷா சஜயன் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் அவரின் அபரிமிதமான வளர்ச்சி நான் எதிர்பார்த்ததுதான். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் சவாலான கதாபாத்திரங்கள் நடிப்பதை விரும்பி செய்தார். தனது இயல்பான நடிப்பால் அவர் ஏற்று நடித்த கதபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். இத்தகைய திறமையான நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்மேலும், ’என்ன விலை’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.
 
இயக்குநர் சஜீவ் பழூர் கூறும்போது .......
 
என்ன விலை’ படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். குறிப்பாக, நிமிஷா சஜயன் போன்ற திறமையான பல நடிகர்கள் படத்தில் இருப்பதால் படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன், நிமிஷாவுடன் 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' என்ற படத்தில் வேலை பார்த்துள்ளேன். ஆனால் இப்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இரண்டிலுமே அவரது பேக்-டு-பேக் ஹிட் கொடுத்து நடிகையாக அவர் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். ’என்ன விலை’ திரைப்படம் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான மற்றும் புதிய நிமிஷாவைக் காண்பிக்கும் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்