100 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்கர் விருதுகள் பட்டியலில புதிய பிரிவு சேர்க்கப்பட உள்ளதை தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட பலர் வரவேற்றுள்ளனர்.
சினிமா உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் கடந்த 97 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் ஹாலிவுட் படங்களுக்கான விருதாகவே இது இருந்து வந்தாலும் சில பிரிவுகளில் உலகளாவிய படங்களும் இந்த விருதுகளை பெறுகின்றது.
ஆஸ்கர் விருதில் சிறந்த இயக்குனர், நடிகர், நடிகை, திரைக்கதை, இசை, பிண்ணனி இசை, பாடல், ஒப்பனை என சினிமாவின் ஒவ்வொரு கலைநயமிக்க பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் இதுவரை ஆஸ்கரின் ஆக்ஷன் காட்சிகளுக்கான ஸ்டண்ட் டிசைன் போன்றவற்றிற்கு விருதுகள் இல்லாமல் இருந்து வந்த நிலையில், 100வது ஆஸ்கர் விருது விழா முதல், 2027ல் இருந்து சிறந்த ஸ்டண்ட் டிசைனுக்கும் ஆஸ்கர் பிரிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹாலிவுட் தொடங்கி எல்லாவிதமான வுட்டிலும் ஸ்டண்ட் ஆக்ஷன் படங்கள்தான் அதிகமாக வருகின்றன. இந்நிலையில் அந்த இயக்குனர்களுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பதிவிட்டுள்ள ராஜமௌலி “இறுதியாக!! 100 வருட காத்திருப்புக்குப் பிறகு!!!
2027 இல் வெளியாகும் படங்களுக்கான புதிய ஆஸ்கார் ஸ்டண்ட் வடிவமைப்பு பிரிவுக்காக மகிழ்ச்சி! இந்த வரலாற்று அங்கீகாரத்தை சாத்தியமாக்கிய டேவிட் லீட்ச், கிறிஸ் ஓ'ஹாரா மற்றும் ஸ்டண்ட் சமூகத்திற்கும், ஸ்டண்ட் வேலையின் சக்தியை கௌரவித்த அகாடமி, தலைமை நிர்வாக அதிகாரி பில் கிராமர் மற்றும் தலைவர் ஜேனட் யாங் ஆகியோருக்கும் மிகப்பெரிய நன்றி. அறிவிப்பில் #RRRMovie இன் அதிரடி காட்சி பிரகாசிப்பதைக் காணும் நாளை எண்ணி மகிழ்கிறேன்” என கூறியுள்ளார். இதன் மூலம் அந்த பிரிவில் முதலில் அப்ளை செய்யப்போவதே ராஜமௌலிதான் போல என பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K