இந்திய திரைவானின் ஆளுமை நடிகை ஸ்ரீதேவி. தென்னிந்திய நடிகர் சங்கம்

ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:11 IST)
பிரபல நடிகை ஸ்ரீதேவி நேற்று துபாயின் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவரது உடல் இன்று மும்பைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீதேவியின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையே சோகக்கடலில் ஆழ்த்திய நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தனது இரங்கலை தெரிவித்துள்ளது. இன்று வெளியிட்டுள்ள நடிகர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி.

தனது நான்காம் வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலமாக கதாநாயகியானார் .தொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார், ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார். 1983- ல் ‘ஹிம்மத்வாலா’ ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து . 1997-ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உச்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி . மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் Si.கார்த்தி , அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ”



 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்