நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் காலா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 28ம் தேதி மும்பையில் தொடங்கியது. இப்படம், நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய கதை என ரஞ்சித் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், காலா படத்தின் கதை தன்னுடையது என ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் “காலா படத்தின் மூலக்கதை என்னுடையது. 1996ம் ஆண்டு கரிகாலன் என்ற தலைப்பில், அந்த படத்திற்கான பூஜையை நடத்தியுள்ளேன். தற்போது என் படத்தின் மூலக்கதை திருடப்பட்டுள்ளது. கரிகாலன் என்ற தலைப்பையும் நான் பதிவு செய்துள்ளேன். இது தொடர்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தினரை தொடர்புகொண்டேன். ஆனால், எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.