யானைகளிடம் மாட்டிக்கொண்ட ஜெயம் ரவி

திங்கள், 17 ஏப்ரல் 2017 (11:38 IST)
பட ஷூட்டிங்கின்போது யானைகளிடம் ஜெயம் ரவி உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் மாட்டிக் கொண்டதாகத் தெரியவந்துள்ளது.
 

 

சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில், ஜெயம் ரவி – நிவேதா பெத்துராஜ் நடித்துவரும் படம் ‘டிக் டிக் டிக்’. ‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜெயம் ரவியை இயக்கி வருகிறார் சக்தி செளந்தர்ராஜன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, கேரள மாநிலத்தில் உள்ள மூணார் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றிருக்கிறது.

ஷுட்டிங் போவதற்கு முன்புதான் அந்தப் பகுதியில் யாரோ ஒருவர் யானை ஒன்றை சுட்டுக் கொன்றிருக்கிறார். இந்நிலையில், ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக சில யானைகள் வந்திருக்கின்றன. பழிவாங்கத்தான் யானைகள் வந்திருக்கின்றன என்று ஒட்டுமொத்த படக்குழுவும் பயத்தில் அரண்டுபோய் நின்றிருக்கிறார்கள்.

ஆனால், அருகிலுள்ள ஏரிக்குச் சென்று நீர் அருந்திய யானைகள், இவர்களை சட்டை கூட செய்யாமல், வந்தவழியே திரும்பிப் போயிருக்கின்றன. அதற்குப் பிறகுதான் யூனிட்டில் இருந்தவர்களுக்கு உயிர் வந்ததாம். அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றாலும், அந்த ‘திக் திக்’ நிமிடங்களை நினைத்தாலே பயம் வந்துவிடுகிறதாம் யூனிட் ஆட்களுக்கு.

வெப்துனியாவைப் படிக்கவும்