அனைத்து கட்சி போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு

சனி, 22 ஏப்ரல் 2017 (13:10 IST)
வருகிற 25ஆம் தேதி விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து நடத்தும் மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாளப் போராட்டத்திற்கு, தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவைத் தெரிவித்துள்ளது.

 
 
தங்களுடைய உரிமைகளுக்காக கடந்த பல நாட்களாகப் போராடி வருகின்றனர் தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள். பலவிதமான வழிகளில் போராட்டம் நடத்தியும், மத்திய அரசு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. தமிழ்நாட்டிலும் பல்வேறு இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய ஒருநாள் போராட்டத்தை நடத்தவுள்ளன அரசியல் கட்சிகள்.  தி.மு.க. முன்னெடுத்துள்ள இந்தப் போராட்டத்தில், பல்வேறு கட்சிகளும் கலந்து கொள்வதாகக் கூறியுள்ளன. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பல வருடங்களாக இயற்கையாலும், காவிரி  பிரச்னையாலும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வரும் தமிழக விவசாயிகள் பலரும், அரசிடம் வாங்கிய கடனைக் கட்ட  முடியாமல் தற்கொலை முடிவை நாடுவது வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றித் தரவேண்டியது  மத்திய – மாநில அரசுகளின் கடமை. அதை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம்” என  கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்