நம்ம அடிவாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும்… இசையமைப்பாளர் டி இமானின் டிவீட்!

வெள்ளி, 14 ஜூலை 2023 (15:51 IST)
அருள்நிதி, துஷாரா விஜயன் மற்றும் சந்தோஷ் நடிப்பில் சை கௌதம் ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் ஜொலிக்கவில்லை. ஆனால் அதன் பிறகு ஓடிடியில் வெளியாகி நல்ல பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தின் இசையமைப்பாளர் டி இமான் பதிவிட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அதில் “50 நாட்களாக தொடர்ந்து சமூக ஊடகங்களில் ‘கழுவேத்தி மூர்க்கனை’ பற்றி எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். தலைவர்களும் திரை ஆளுமைகளும் முற்போக்காளர்களும் பல மேடைகளில் படத்தினைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள். படம் சார்ந்த கூட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. பத்துக்கும் மேலான காட்சிகள் தனியாக சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு நல்ல திரைப்படம் என்பது சமூகத்தில் ஒரு உரையாடலை நிகழ்த்த வேண்டும்; ஏதோ ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும். படம் பேசும் தளத்திலான சூழல்கள் உருவாகும்போது படம் மீண்டும் திரும்பிப் பார்க்கப்பட வேண்டும். அதுவே வெற்றி. 50 நாட்களாக ’கழுவேத்தி மூர்க்கன்’ அவ்வேலையை செய்தபடி பயணித்துக் கொண்டே இருக்கிறான். "நம்ம அடி வாங்குறவங்க பக்கம்தான் நிக்கணும், அவங்கள அடி வாங்காம பார்த்துக்கணும். தோள் கொடுத்தவர்களுக்கு கை குலுக்கி நன்றிகளும் பூங்கொத்துக்களும். தொடர்கிறது பயணம்.” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்