மாஃபியாவோடு இணைந்த அருண் விஜய்- இத்தனை ரோலில் நடிக்கிறாரா?

வியாழன், 4 ஜூலை 2019 (20:12 IST)
“தடம்” திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடித்துவரும் அருண்விஜய் தற்போது “மாஃபியா” என்ற புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நீண்டகாலமாக சரியான படங்கள் அமையாத அருண் விஜய்க்கு மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த “தடம்” திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் அருண் விஜய். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனியோடு “அக்னி சிறகுகள்” என்ற திரைப்படத்திலும், ”பாக்ஸர்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்க, “துருவங்கள் 16” இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் “மாஃபியா” என்ற படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட கார்த்திக் நரேன் செய்தியாளர்களிடம் “சென்னையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்குகிறோம். 35 நாட்களில் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளோம். மூன்றுவிதமான கதாப்பாத்திரங்களில் அருண் விஜய் இதில் நடிக்க இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறுக்கு பிறகு இயக்கிய இரண்டாவது படமான ”நரகாசூரன்” இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீஸுக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்