படத்துக்கு இசையமைக்க நாசூக்காக மறுத்த இசைப்புயல்… அதையே பப்ளிசிட்டி ஆக்கிய பார்த்திபன்!

திங்கள், 19 ஜூன் 2023 (08:17 IST)
வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும் பார்த்திபனின் வித்தியாச முயற்சி ரசிகர்களைக் கவர்ந்தது.

இப்போது பார்த்திபன் டீன் என்ற படத்தை பதின் பருவத்தினரை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்துக்கும் இசையமைக்க அவர் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானை அனுகியுள்ளார். அதற்கு மெயில் வழியாக பதிலனுப்பியுள்ள ரஹ்மான், பனிச்சுமை காரணமாக தன்னால் இந்த படத்துக்கு இசையமைக்க முடியாது என அறிவித்துள்ளார்.

ரஹ்மானின் மெயில் “ தனிப்பட்ட மற்றும் தொழில் காரணமாக வேளைப்பளு அதிகமாக உள்ளதால், என்னால் உங்களின் இந்த படத்துக்கு இசையமைக்க முடியவில்லை.  ஆனால் உங்கள் கதையை கேட்க நான் மிக ஆவலாக உள்ளேன்.  நீங்கள் திரை இயக்கத்தை ஆழ்ந்த காதலுடன் செய்யும் இயக்குனர்களில் ஒருவர்.  உங்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் ஆசி உங்களுக்கு கிடைக்கட்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்த மின்னஞ்சலை பகிர்ந்த பார்த்திபன் “பழகுதல் காதலால், விலகுதலும் காதலால், ஆதலால்… ஒருவரை ஒருவர் போற்றி மகிழ்வோம் இறுதிவரை! வரும் படத்திலும் இருவரும் இணைவோமென நினைத்து இயலாதபோது நண்பர் ஏஆர்ஆர் அவர்களிடமிருந்து வந்த மிருது மெயில்” எனக் கூறி ட்வீட் செய்ய அது கவனத்தைப் பெற்றுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்