கோலிவுட்டுக்கு வரும் அம்பானி –கார்ப்பரேட் மயமாகும் தமிழ் சினிமா ?

வெள்ளி, 4 ஜனவரி 2019 (10:43 IST)
முகேஷ் அம்பானி இந்தியா முழுவதும் பலத் தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அதையடுத்து தற்போது தமிழ் சினிமாவில் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட இருப்பதாக ஒருத் தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமா ஆரம்பக்காலம் தொட்டே ஒரு முறையான வரையறையின்றி சூதாட்டம் போலவே நடத்தப்பட்டு வருகிறது. அதனால் பலத் தயாரிப்பாளர்கள் இன்று தொடர்ந்து படம் தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர். மேலும் நில நிறுவனங்கள் தயாரிப்புத் தொழிலில் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டுவிட்டன. இடையில் அமிதாப் பச்சனின் கார்ப்பரேட் கம்பெனி தமிழ் சினிமாவில் முதலீடு செய்து அடிபட்டு பின்னர் ஒதுங்கிக் கொண்டது.

இதையடுத்துக் காலம் காலமாக தனிநபர் கையில் இருந்த சினிமா தயாரிப்புத் தற்போது மெல்ல கார்ப்பரேட் கைகளுக்கு செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவின் தற்போதைய காலத்தில் அதிகளவில் படங்களை தயாரிப்பதும், முதல் தர நடிகர்கள் மற்றும் இயக்குனர்களை வைத்துப் படம் தயாரிப்பதும் லைகா மற்றும் சன்பிக்சர்ஸ் ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.

ரஜினி, கமல், விஜய், சூர்யா, மணிரத்னம், ஷங்கர் ஆகிய தமிழ் சினிமாவின் முன்னணி நபர்கள் அனைவரும் தற்போது இந்த இரு நிறுவனங்களின் படங்களில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற ஆண்டில் உருவான 2.0, சர்கார், வடசென்னை, செக்கச் சிவந்த வானம் ஆகியப் படங்கள் அனைத்தும் இவ்விரு நிருவனங்களின் தயாரிப்புகள் அல்லது வெளியீடுகள். இந்த ஆண்டு உருவாகிவரும் இந்தியன் 2, காப்பான், மணி ரதனத்தின் பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தயாரிப்புகளே. மெல்ல மெல்ல தமிழ் சினிமா இந்த இரு நிறுவனங்களின் கைக்குள் சென்று கொண்டிருப்பதால், சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்காத சூழல் அல்லது தங்கள் படங்களை ரிலீஸ் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியை எதிர்பார்க்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் பலர் சினிமா தயாரிப்புத் தொழிலை விட்டு செல்லும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
நிலைமை இப்படி இருக்கையில் இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான அம்பானி தமிழ் சினிமாவில் முதலீடு செய்ய இருப்பதாகத் தெரிகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் இதுபற்றிப் பேசி முன்பணம் கொடுத்துள்ளதாகவும் விரைவில் வரிசையாக பட்ங்கள் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனால் சிறுபடத் தயாரிப்பாளர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்