இந்த ஆண்டு முழுவதும் சினிமா மற்றும் கார் பந்தயம் என இரட்டைக் குதிரைகளில் பயணித்து வருகிறார் அஜித். தன்னுடைய குட் பேட் அக்லி படம் அடைந்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அஜித்குமார் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் ஆர்வமாகக் கலந்துகொண்டு வருகிறார். இனிமேல் வருடத்துக்கு ஒரு படம், மீத நேரத்தில் கார் ரேஸ் பந்தயங்கள் என திட்டம் வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆண்டுக்கு ஒரு படம் மற்ற நாட்களில் கார் பந்தயம் என அவர் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கியுள்ளார். அதில் சமீபத்தில் தமிழகத்தின் ரேஸர் நரேன் கார்த்திகேயனும் இணைந்தார். தொடர்ந்து துபாய், ஜெர்மனி போன்ற நாடுகளில் பந்தயங்களில் கலந்துகொண்ட அஜித்குமார் அணி சில பரிசுகளையும் வென்றது.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான சீசனை முடித்துள்ள அஜித் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் தனது மகன் மற்றும் மனைவி ஷாலினியோடு கேரளாவில் உள்ள ஊட்டுக்காடு பகவதி தேவஸ்தானத்துக்கு சென்று வழிபாடு செய்துள்ளார். மேலும் பகவதி அம்மன் உருவத்தை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொண்டுள்ளார். இந்த டாட்டூ தற்காலிக டாட்டூவா அல்லது நிரந்தரமான டாட்டூவா என்பது தெரியவில்லை. அஜித் டாட்டூவோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.