ஒரு வழியாக தயாரிப்பாளருக்கு நன்றி சொன்ன கோப்ரா இயக்குனர்!

சனி, 19 பிப்ரவரி 2022 (10:19 IST)
கோப்ரா படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்துவுக்கும் அந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாருக்கும் இடையே பட்ஜெட் அதிகமானது சம்மந்தமாக கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.

கோப்ரா படம் ஆரம்பிக்கப்பட்ட போது அதன் பட்ஜெட் 50 கோடிகள் எனப் தயாரிப்பாளருக்கு சொல்லியுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. ஆனால் இன்னும் படப்பிடிப்பு நிறைவடையாத நிலையில் 68 கோடி ரூபாய் வரை செலவாகிவிட்டதாம். இன்னும் மீதமுள்ள காட்சிகளை படமாக்க 10 கோடி ரூபாய் வரை செலவாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர் இயக்குனர் மேல் பயங்கர கோபத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கோப்ரா படத்தை கிடப்பில் போட்டுவிட்டு மகான் படத்தில் கவனம் செலுத்தினார் தயாரிப்பாளர் லலித்.

மகான் முடிந்து ரிலீஸ் ஆகிவிட்ட நிலையில் இப்போது கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்துவந்தது. ஏற்கனவே விக்ரம் சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் மற்ற காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை இயக்குனர் அஜய் ஞானமுத்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்து படக்குழுவோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

இந்த டிவீட்டில் அவர் தயாரிப்பாளர் லலித்தைப் பற்றி ஒரு வார்த்தைக் கூறவில்லை. இது சம்மந்தமாக பிரபல தயாரிப்பாளரான டி சிவா ‘போட்ட பட்ஜெட்டை விட பல மடங்கு செலவை இழுத்து விட்டு, அதைத் தாங்கிக்கொண்டு படத்தை முடித்துக்கொடுத்த தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஒரு நன்றி கூட சொல்லாத இயக்குநரை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ எனக் கூறினார்.

அவருக்குப் பதில் அளித்துள்ள அஜய் ஞானமுத்து ‘கோப்ராவின் பட்ஜெட் அதிகமானதிற்கு நான் காரணமில்லை என்பதை என்னால் எங்கு வேண்டுமானாலும் நிருபிக்க முடியும். புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாகப் பேசக் கூடியவை. குழு என்று சொன்னால் அது தயாரிப்பாளரையும் சேர்த்துதான். நான் எப்போதும் அவரை கைவிட்டதில்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை சில நாட்களுக்குப் பிறகு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு டிவீட்டைப் பகிர்ந்துள்ளார். கோப்ரா படப்பிடிப்பு முடிந்ததும், நடந்த பார்ட்டியில் தயாரிப்பாளருக்கு கேக் ஊட்டிய புகைப்படத்தை பகிர்ந்த அஜய் ஞானமுத்து ‘என் அன்பை சொல்ல நன்றி என்பது மிக சிறிய வார்த்தை. எங்களை எல்லா சூழல்களிலும் தாங்கியவர் நீங்கள்’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்