மிஸ்டர் ரஜினி...இவர்கள்தான் உங்கள் படை வீரர்களா? - எகிறும் கஸ்தூரி

செவ்வாய், 23 மே 2017 (17:40 IST)
நடிகை கஸ்தூரி சமீப காலமாக அரசியல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு தன்னுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்.


 

 
ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதை வரவேற்பவர்களும் உண்டு, எதிர்ப்பவர்களும் உண்டு. 
 
அரசியல் தலைவர்கள் அனைவரும் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் “நல்ல அரசியல் தலைவர் எதிர்ப்பாராத சூழ்நிலையிலும் உடனே முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி. போர் போர் என்று ஒரே அக்கப்போராக உள்ளது” என்று பதிவிட்டார். 


 

 
இதற்கு ரஜினி ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். கஸ்தூரியை சிலர் கொச்சையாக விமர்சித்தனர். அதற்கு கஸ்தூரியும் பதிலடி கொடுத்தார்.
 
இந்நிலையில் ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்துள்ள கஸ்தூரி “ நானும் ரஜினியின் ரசிகைதான். அவரை நான் அரசியலுக்கு வர வேண்டாம் எனக்கூறவில்லை.  ஆனால், இதை முன்பே செய்திருக்க வேண்டும். தற்போது அவர் கட்சி தொடங்கி, அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு, அவரை பற்றிய ஒரு முடிவுக்கு வரவே இரண்டு தேர்தல் தேவைப்படும். அதற்குள் பத்து வருடம் ஆகிவிடும். மேலும், அவருக்கு பின் யார் என்ற கேள்வியும், குழப்பமும் ஏற்படும். அதனால், அவர் நன்றாக யோசித்து எதுவும் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.
 
நான் டிவிட்டரில் தெரிவித்த கருத்திற்கு அவரது ரசிகர்களில் சிலர் மிகவும் அநாகரிமாக கருத்து தெரிவிக்கிறார்கள். என்னை மட்டமாக விமர்சிக்கிறார்கள். இவர்களெல்லாம் அவரின் உண்மையான ரசிகர்களா என தெரியவில்லை. இதுபோன்ற ஆட்கள்தான் அவர் தன்னுடைய படைவீரர்களா நினைக்கிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்