இந்த ஆண்டின் சிறந்த திரை ஆளுமை! – நடிகர் சிரஞ்சீவிக்கு விருது!

திங்கள், 21 நவம்பர் 2022 (09:28 IST)
கோவா திரைப்பட விழாவில் இந்த ஆண்டிற்கான சிறந்த திரை ஆளுமை விருது பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

53வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல்வேறு நாட்டு திரைப்படங்களும் திரையிடப்படும் நிலையில் உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் இந்த விழாவில் கலந்து கொள்ள பலர் வருகை தந்துள்ளனர்.

நேற்று நடந்த திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்வில் பிரபல இந்தி நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகுர், உலகம் முழுவதில் இருந்தும் பல இயக்குனர்கள் இந்திய திரைப்பட விழாவில் கலந்து கொண்டு தங்கள் படங்களை திரையிடுவது பெருமைக்கு உரிய விஷயம் என கூறியுள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் சிறந்த திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரிலும் பதிவிட்டுள்ள அவர் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150க்கும் அதிகமான படங்களில் பணியாற்றி சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி புகழ்பெற்றுள்ளதாக அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்